திருப்பத்தூர் மாவட்டத்தில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் பெற விண்ணப்பிக்கலாம் கால்நடை உதவி இயக்குனர் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் பெற விண்ணப்பிக்கலாம் என கால்நடை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-22 05:38 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2020-2021ம் ஆண்டுகளில் 150 கறவை மாடுகளும், 2 ஆயிரத்து 982 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்குவதற்காக வரும் 24 மற்றும் 25 தேதிகளில் மொத்தம் 31 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். அதன் மூலம் பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அக்டோபர் மாதம் 2-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் நடக்க இருக்கும் 2-வது கிராம சபா கூட்டத்தில் பயனாளிகள் தேர்வு இறுதிப்பட்டியல் கலெக்டர் அங்கீகரிக்கப்பட்டு நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேர்வு செய்யப்படும் 150 பெண் பயனாளிகளுக்கு தலா ஒரு விலையில்லா கறவை மாடும், 2 ஆயிரத்து 982 பயனாளிகளுக்கு ஒரு கிடா ஆடு, 3 பெண் ஆடுகள் என மொத்தம் தலா 4 ஆடுகள் வீதம் பயனாளிகள் முன்னிலையில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

70 ஆயிரம் கோழிகள்

மேலும் கால்நடை பராமரிப்புத்துறை விலையில்லா புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2020-2021ம் ஆண்டு விலையில்லா நாட்டு இன அசில் கோழிகள் மொத்தம் 7 ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பெண் பயனாளிகள் வீதம் மொத்தம் 2 ஆயிரத்து 800 பயனாளிகளுக்கு தலா 25 கோழிகள் என 70 ஆயிரம் கோழிகள் வழங்கப்பட உள்ளன.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கடந்த ஆண்டுகளில் விலையில்லா கோழிகள் பெறாதவர்கள் அரசு பிற திட்டங்கள் முலம் பயன்பெறாதவர்கள், அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் மூலமாக வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர், திருப்பத்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்