சுவர் விளம்பரம் செய்வதில் மோதல்: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

சுவர் விளம்பரம் செய்வதில் மோதல்: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் சென்னையில் 7 இடங்களில் நடந்தது.

Update: 2020-09-23 02:15 GMT
சென்னை,

சென்னை நங்கநல்லூர் பகுதியில் சுவர் விளம்பரம் தொடர்பாக தி.மு.க.வினர்-பா.ஜ.க.வினர் இடையே நடந்த மோதலில் பா.ஜ.க. மகளிர் அணியினர் காயம் அடைந்தனர். பின்னர் போலீசார் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்து அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் சுவர் விளம்பர விவகாரத்தில் தி.மு.க.வினரின் செயல்பாடுகளை கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னையில் 7 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது தி.மு.க.வினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதன்படி நங்கநல்லூர் ரங்கா தியேட்டர் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கலந்துகொண்டார். அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் எம்.என்.ராஜா, கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர், அமைந்தகரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் அணி தலைவர் பால்கனகராஜ், தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் சக்ரவர்த்தி, கொளத்தூரில் மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்