இதே சூழ்நிலை நீடித்தால் ஊரடங்கை நீட்டிக்க அவசியம் இல்லை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

இதே சூழ்நிலை நீடித்தால் ஊரடங்கை நீட்டிக்க அவசியம் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2020-09-24 00:26 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை திரு.வி.க. நகர் 6-வது மண்டலத்துக்கு உட்பட்ட புரசைவாக்கம் தாணா தெருவில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய களப்பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

மருத்துவ குழு, வல்லுனர் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது. இதே சூழ்நிலை நீடித்தால் இனி ஊரடங்கை நீட்டிக்க அவசியம் இல்லை.

தமிழக விவசாயிகளின் மனநிலையை புரிந்து கொண்டுள்ள முதல்-அமைச்சர் வேளாண் மசோதா குறித்த விளக்கத்தை தெளிவாக அளித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேளாண் மசோதாவை வைத்து மக்களிடம் பொய் பிரசாரம் செய்கிறார். பல்வேறு விஷயங்களில் மக்களை திசைதிருப்ப தி.மு.க.வின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. இதிலும் தோல்வியே கிடைக்கும். ஊரெங்கும் ஒரே பேச்சு 2021-ல் ஜெயலலிதாவின் ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் கொரோனா சிறப்பு அதிகாரி அரவிந்த், மண்டல பொறுப்பு அதிகாரி செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் பாலகங்கா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்