திருப்பத்தூர் அருகே, இணைப்பு கழன்றதால் பின்னோக்கி வந்து டிரக்கில் மோதிய டிராக்டர் டிரைவர் இருக்கையிலேயே உடல் நசுங்கி பலி

சிமெண்டு கற்களை ஏற்றிய டிரக்கை மலைப்பாதையில் இழுக்க முடியாத டிராக்டர் முன் சக்கரம் மேலே தூக்கியது. இதனால் இணைப்பு கழன்று பின்னோக்கி வந்த டிராக்டர் டிரக் மீது மோதியதில் டிரைவர் உடல் நசுங்கி இறந்தார்.

Update: 2020-09-26 23:00 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் தாலுகா குரும்பேரி அருகில் உள்ள நாகராஜன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சி. இவரின் மகன் கோபி (வயது 32), டிராக்டர் டிரைவர். அவர் நேற்று வழக்கம்போல நாகராஜன்பட்டியில் இருந்து டிராக்டரில் சிமெண்டு கற்களை (ஹாலோ பிரிக்ஸ்) ஏற்றிக்கொண்டு மாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஒரு மலை குன்றை கடக்க முயன்றபோது, டிரக்கில் அளவுக்கு அதிகமாக சிமெண்டு கற்களை ஏற்றியிருந்ததால், டிராக்டர் என்ஜின் இழுக்க முடியாமல் திணறி திடீரென முன் சக்கரம் அப்படியே மேலே தூக்கியது.

அந்த நேரத்தில் இணைப்பு கழன்று பின்நோக்கி நகர்ந்த டிராக்டர் என்ஜின் டிரக்கின் மீது மோதியபோது, சீட்டில் அமர்ந்திருந்த டிரைவர் கோபி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்