வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்: கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.

Update: 2020-09-27 15:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், உதவி கலெக்டர்கள் கற்பகவள்ளி, குணசேகரன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுந்தரம், காத்தவராயன் (அ.தி.மு.க.), கோவிந்தன்(தி.மு.க.), பன்னீர்செல்வம் (காங்கிரஸ்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி பன்னீர்செல்வம், தேசியவாத காங்கிரஸ் கட்சி சந்திரமோகன், தே.மு.தி.க. முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், அனைத்து தாசில்தார் அலுவலகம், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் அலுவலகம், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களிலும், 1,858 வாக்குச்சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். இந்த அலுவலகங்களில் வாக்காளர்கள் தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கலாம்

1.1.2021-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்ப படிவம் 6, 7, 8 மற்றும் 8-ஏ மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அரசு வேலை நாட்களில் பெறப்படும். மேலும் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் இறுதி செய்யப்படும். இரண்டு சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

இந்த முகாம் நாட்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம். மேலும் இ-சேவை மையங்களின் மூலமும் பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்