கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் உடைப்பு ரோட்டில் ஆறாக தண்ணீர் ஓடியது

கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் ரோட்டில் தண்ணீர் ஆறாக ஓடியது.

Update: 2020-10-01 00:14 GMT
ஈரோடு,

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ள இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள், கொப்பு வாய்கால்கள் வழியாக விவசாய விளைநிலங்களில் பாய்ந்து வருகிறது.

இதனால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகவும் உற்சாகமாக பணிகள் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் உள்ள பெரியார் நகர் அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.

ரோட்டில் தண்ணீர்

இதனால் வாய்க்கால் தண்ணீர் ரோட்டில் ஆறாக ஓடியது. இந்த தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. உடனடியாக உடைப்பு சரி செய்யப்படாததால் அங்குள்ள ஒரு கிணறு முழுமையாக தண்ணீரால் நிரம்பியது.

கொப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் அதற்கு பின்னர் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தடையானது. வாய்க்கால் கரைகள் மண்ணால் அமைக்கப்பட்டதாக இருப்பதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமாகி வருவதாகவும், உடைப்புகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்