கர்நாடகாவில் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - சுகாதாரத் துறை உத்தரவு

கர்நாடகாவில் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-01 08:51 GMT
பெங்களூரு, 

இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருகிறது. காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவ மையங்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அந்த மருத்துவ மையங்களில் மார்பில் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை மையங்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் ஒரு சளி மாதிரி சேகரிப்புக்கு ரூ.200 கட்டணம் வழங்கப்படும். அதே மருத்துவ மையத்தில் ஆய்வகம் இருந்தால் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளலாம். ஒருவேளை அந்த வசதி இல்லாவிட்டால் அந்த நோயாளிகளை அருகில் உள்ள காய்ச்சல் மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்கவும், வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து இறப்புகளை தடுக்கவும் இந்த நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்துள்ளது.

இவ்வாறு ஓம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்