சாக்கோட்டை யூனியன் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சாக்கோட்டை யூனியன் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2020-10-01 09:30 GMT
காரைக்குடி,

சாக்கோட்டை யூனியன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆணையாளர் திருப்பதி ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், யூனியன் துணைத்தலைவர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடைபெற்றது.

கவுன்சிலர் சொக்கலிங்கம்: சங்கராபுரம் ஊராட்சி 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதி. அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அந்த ஊராட்சி அக்கறை செலுத்தவில்லை. சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு உடனடியாக தனி அலுவலர் நியமிக்க வேண்டும். இந்த ஊராட்சி பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில் முறைகேடு நடைபெறுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

கவுன்சிலர் சுப்பிரமணியன்: சங்கராபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி நிறைவேற அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே மக்கள் பிரதிநிதிகளின் உடனடி கடமையாகும்.

கவுன்சிலர் தேவி: கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் மக்களுக்காக எந்த தேவையினையும் பூர்த்தி செய்ய முடிய வில்லை.

மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன்: மக்களுக்கான அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்றி கொடுக்க முடியவில்லை.

ஆணையாளர் திருப்பதிராஜா: கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சங்கராபுரம் ஊராட்சி பிரச்சினை குறித்த கவுன்சிலர்களின் கருத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும்.

யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன்: கவுன்சிலர்கள் தங்களது வார்டில் அடிப்படை தேவைகள் குறித்து கடிதம் கொடுங்கள். உடனை நடவடிக்கை எடுக்கப்படும். நம்பிக்கையோடு மக்கள் பணியை தொடருங்கள் என்றார்.

இதையடுத்து கவுன்சிலர் சொக்கலிங்கம் பேசும்போது, சங்கராபுரம் ஊராட்சிக்கு தனி அலுவலர் நியமிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் வெளி நடப்பு செய்வோம் என்றார். இதைதொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியனும் கூட்ட அரங்கினை விட்டு வெளியேறினார்.

மேலும் செய்திகள்