துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்திய 3 கிலோ தங்கம் பறிமுதல் - 14 பேர் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்திய ரூ.1 கோடியே 48 லட்சத்து ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 820 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 14 பேரை கைது செய்தனர்.

Update: 2020-10-01 23:45 GMT
ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தில் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி துபாயில் சிக்கி தவித்தவர்களுடன் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிறப்பு விமானம் வந்தது.

அதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் ஒரு குழுவாக வந்தனர். அவர்களை சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். 7 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 7 பேரின் உள்ளாடைக்குள் தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.75 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 430 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.72 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 390 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.துபாயில் இருந்து சிறப்பு விமானங்களில் சென்னை வந்த 14 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 48 லட்சத்து ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 820 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 14 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்