6 மாதங்களுக்கு பிறகு நெல்லையில் தனியார் டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கம்

6 மாதங்களுக்கு பிறகு நெல்லையில் தனியார் டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

Update: 2020-10-04 23:00 GMT
நெல்லை,

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கில் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், கடந்த மாதம் 7-ந் தேதியில் இருந்து மாவட்டங்களுக்கு இடையிலும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சில தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. எனினும் நெல்லை மாநகரில் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை.

தனியார் டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கம்

இந்த நிலையில் நெல்லை மாநகரில் நேற்று முதல் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்தனர். 6 மாதங்களுக்கு பிறகு நெல்லை மாநகர பகுதிகளில் தனியார் டவுன் பஸ்கள் ஓடத் தொடங்கியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்