அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் கலெக்டரிடம், நாம்தமிழர் கட்சி வலியுறுத்தல்

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், என கலெக்டரிடம் நாம்தமிழர் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-10-06 00:02 GMT
ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலத்தில் முதன்முறையாக மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

கொரோனா தொற்று காரணமாக தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க, கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை கலெக்டர் நடத்தி வருகிறார். அதன்படி, நேற்று ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

சுகாதார மேற்பார்வையாளர் ஆய்வாளர்கள் ஹரிகர சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் கங்காதரன் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா பரிசோதனை, ரத்த அழுத்தம், உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

மனுகொடுக்க வந்த மக்கள் சோதனைக்கு பின்னரே தாலுகா அலுவலத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

டாக்டர்கள் காலிபணியிடத்தை...

நாம் தமிழர் கட்சியினர் திரளாக வந்து கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்,‘ஆலங்குளம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி பல ஆண்டுகள் ஆகியும் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாமல் போதிய மருத்துவ வசதி இல்லாமல் உள்ளது. இதனால் ஆலங்குளம் பகுதிகளில் நடக்கும் சாலை விபத்துகளில் முறையான முதலுதவி செய்யாமல் நெல்லை மற்றும் தென்காசி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. எனவே, அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கிராம நிர்வாக அலுவலர் சங்கம்

கிராம நிர்வாக அலுவலர் சங்க தென்காசி மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி தலைமையில் ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் நடைபெறாமல் இருக்கும் பொதுகலந்தாய்வு கால தாமதமின்றி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆலங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 250 பேர் தாலுகா அலுவலகத்தில் மனுகொடுத்தனர். முதியோர் உதவித்தொகை, அங்கன்வாடி மையங்களில் சமையல் பணி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்த முகாமில் ஆலங்குளம் யூனியன் ஆணையாளர் செல்வராஜ், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், ஆலங்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு)ஹரிஹரன், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் சண்முகசுந்தரி, கோவிந்தராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் தாசில்தார் பட்டமுத்து மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் செய்திருந்தனர். தென்காசி கலெக்டர் வருகையொட்டி ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னி வளவன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்