நெமிலி அருகே, மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி - ரூ.2¼ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்காரர்

நெமிலி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார். லாரியின் இருந்த ரூ.2¼ லட்சத்தை உரியவரிடம் போலீஸ்காரர் ஒப்படைத்தார்.

Update: 2020-10-06 05:45 GMT
நெமிலி,

ராணிப்பேட்டை மாவட்டம் பரமேஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 23), இவரும் கடம்பநல்லூர் கிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் ஜெகதீசன் (23) என்பவரும் தங்களின் இருசக்கர வாகனத்தில் காஞ்சீபுரத்தை நோக்கி சென்றனர். நெமிலியை அடுத்த மஞ்சம்பட்டி என்ற இடத்தில் சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது அந்தவழியாக வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஜெகதீசன் படுகாயமடைந்தார். அவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நெமிலி போலீஸ்காரர் மஞ்சுநாதன், லாரி உரிமையாளர் யார் என கண்டறிய லாரியை ஆய்வு செய்தார். அப்போது லாரியில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 300 இருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுபற்றி தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து சம்பந்தப்பட்ட நபரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.

பணத்தை ஒப்படைத்த போலீஸ்காரர் மஞ்சுநாதனின் நேர்மையை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சக பணியாளர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்