சிரா தொகுதி இடைத்தேர்தல்: ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பெண் வேட்பாளருக்கு கொரோனா

சிரா தொகுதி இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளராக அம்மஜம்மா நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதால் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-10-06 21:33 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் சிரா தொகுதியில் மறைந்த சத்யநாராயணா எம்.எல்.ஏ.வின் மனைவி அம்மஜம்மா (வயது 62) நிறுத்தப்படுவார் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ’சிரா தொகுதியில் மறைந்த சத்யநாராயணா எம்.எல்.ஏ.வின் மனைவி அம்மஜம்மாவை தான் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம். இதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லை. அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய அந்த தொகுதிக்கு செல்வேன்’ என்றார். சிரா தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) , செல்வாக்கு மிகுந்த கட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு

இதற்கிடையே சிரா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அம்மஜம்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதாவது அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் அம்மஜம்மாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவலை அவரது மகன் சத்ய பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அம்மஜம்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்