சங்கரன்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

சங்கரன்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-10-06 23:46 GMT
சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் நேற்று முன்தினம் கடையநல்லூர் அருகில் நடந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தது. நவநீதகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர் ஆம்புலன்சை ஓட்டினார். அவருடன் உதவியாளர் கார்த்திகேயன் என்பவரும் வந்தார்.

இந்த நிலையில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள மண்டபம் அருகே வந்த போது அங்கு மதுபோதையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி, முத்துராஜை சரமாரியாக தாக்கி, சாவியை பிடுங்கி சென்றனர். இதனால் ஆம்புலன்சை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

3 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக செக்கடிதெருவை சேர்ந்த கண்ணன் (வயது 30), முத்துப்பாண்டி (28), சங்குபுரம் பகுதியை சேர்ந்த முனியராஜ் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சிலரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்