திருச்சுழி அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்சுழி அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-07 12:51 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சேர்ந்த புரசலூர் கண்மாயில் சிதறிக்கிடக்கும் கற்களில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக அந்த ஊரை சேர்ந்த உதவி பேராசிரியர்கள் ரமேஷ், ஸ்ரீபால் ஆகியோர் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுருவிற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் அந்த கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

புரசலூர் கண்மாய் பகுதியில் பழமையான ஒரு கோவில் இருந்து அழிந்து போயிருக்கிறது. அந்த கோவிலின் கற்கள் கண்மாயில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இந்த கற்களை பல ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் கண்மாய் மடைகள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் புதிதாக மடை கட்டுவதற்காக பழைய கற்களை அகற்றியபோது அதில் கல்வெட்டுகள் இருந்ததை உதவி பேராசிரியர்கள் ரமேஷ், ஸ்ரீபால் ஆகியோர் கண்டுபிடித்தனர்.

கண்மாயில் சிதறிக்கிடப்பவை, கோவில் கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள ஜகதி, குமுதம், யாளிவரி ஆகியவற்றின் உடைந்த பகுதிகள் ஆகும். இதில் ஜகதியில் இரண்டும், குமுதத்தில் ஒன்றுமாக மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முழுமையாக இல்லாமல் துண்டுகளாக உள்ள இந்த கல்வெட்டுகள் கி.பி.13-ம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும். 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் ஆகும்.

குமுதத்தின் உடைந்த கல்லில் உள்ள 4 வரி கல்வெட்டில் நிலத்தின் எல்லை குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த ஊர் கோவிலுக்கு நிலதானம் வழங்கி இருப்பதை அறியமுடிகிறது. இதில் வருள்வாசகநல்லூர் எனும் ஊர் குறிப்பிடப்படுகிறது. இது திருவருள்வாசகநல்லூராக இருக்கலாம்.

ஜகதியில் இருந்த இரு துண்டு கல்வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இதில் ஒன்றில் இத்திகுளத்தராயன் என்பவர் பெயரும், அஞ்சு நிலையூருக்கு சமைந்த காரணவர் பெயரும், அடுத்ததில் வெண்கலம் பறித்து மண்கலம், சுபமஸ்து ஆகிய சொற்களும் காணப்படுகின்றன. இதில் காரணவர் பெயருக்கு கீழே குதிரையின் படம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.

காரணவர், படைக்காரணவர் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுபவர்கள் படை வீரர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த கல்வெட்டில் குதிரை படம் வரையப்பட்டிருப்பதன் மூலம் அவர்கள் குதிரைப்படை வீரர்களாக கருதலாம். அஞ்சு நிலையூர் காரணவர்கள் இவ்வூர் கோவிலுக்கு தானம் வழங்கி இருக்கலாம். அருப்புக்கோட்டை, இலுப்பைக்குடி, பள்ளிக்குறிச்சி, திருமோகூர் ஆகிய ஊர்களில் இருந்த காரணவர் பற்றி கி.பி.13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் சொல்லப்படுகிறது. படைவீரர்களுக்கு தானமாக மன்னர்கள் வழங்கிய பள்ளிக்குறிச்சி என்ற ஊரை காரணவர்கள் நிர்வகித்து வந்துள்ளனர்.

கல்வெட்டில் சொல்லப்படும் அஞ்சு நிலையூர் மதுரை அருகிலுள்ள நிலையூராக இருக்கலாம். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரம், நரிப்பையூர் உள்ளிட்ட சாயல்குடியின் கடற்கரைப்பகுதியிலும், அருப்புக்கோட்டை, மதுரையிலும் காரண மறவர்கள் என்பவர்கள் தற்போதும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஊர் தொடக்கப்பள்ளி அருகில், கி.பி.18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறிய பெண்களுக்கான இரு சதிக்கற்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்