தூத்துக்குடி துறைமுகம் வழியாக 45 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி வேளாண் அதிகாரி தகவல்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக 45 ஆயிரத்து 161 டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டது.

Update: 2020-10-07 21:05 GMT
தூத்துக்குடி,

விவசாயத்துக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு பல்வேறு நடடிவக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில் தமிழக விவசாயிகளின் உரத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில், வேளாண்மை துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, துணை இயக்குநர் (உரம்) ஷோபா ஆகியோரின் முயற்சியால் தமிழகத்துக்கு தேவையான உர ஒதுக்கீடு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது.

அதன்படி யூரியா உரம் தடையின்றி உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைத்திட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழிகாட்டுதலின்படி வெளிநாட்டில் இருந்து 45 ஆயிரத்து 161 டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த யூரியாவை ஏற்றி வந்த கப்பல் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.

6 ஆயிரம் டன்

இதில் தமிழ்நாட்டுக்கு 35 ஆயிரத்து 561 டன் யூரியா ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உள் ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் 08.10.20 அன்று மேலும் ஒரு யூரியா கப்பல் தூத்துக்குடிக்கு வர உள்ளது. எனவே விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி யூரியா உரம் கிடைக்கும்.

இந்த உரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும், தனியார் உரக்கடைகளின் மூலமாகவும் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி அருகில் உள்ள உரக்கடைகளில் யூரியா உரத்தை தேவையான அளவுக்கு வேளாண்மைத்துறையின் உரிய பரிந்துரைப்படி பெற்று பயனடையுறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்