மோட்டார் சைக்கிளில் சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்து மாணவர் கருகி சாவு

மோட்டார் சைக்கிளில் சென்ற போது திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் ஒருவர் உடல் கருகி பலியானார். இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2020-10-08 06:15 GMT
ஆலங்குளம்,

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே சுண்டங்குளம் கிராமத்தை சேர்ந்த செந்தட்டி காளைபாண்டியன் என்பவருடைய மகன் சரவணன் (வயது 22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் சரவணன் சொந்த ஊரில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோடு பகுதிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்ப வந்து கொண்டு இருந்தார்.

அப்போது மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் மாணவர் சரவணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆலங்குளம் போலீசாரும், மின்வாரியத்தினரும் விரைந்து வந்தனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சரவணனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்