கடையநல்லூர் அருகே லாரி மோதி ஆசிரியையின் கணவர் பலி

கடையநல்லூர் அருகே லாரி மோதி ஆசிரியையின் கணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் பெண் பலியானார்.

Update: 2020-10-09 23:44 GMT
அச்சன்புதூர்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் ரோடு பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மகன் செய்யது முகைதீன் சலீம் (வயது 38). வியாபாரியான இவர் பாக்கெட் பால் மற்றும் தேங்காய் ஆகியவற்றை மொத்த விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ஷாமிலா. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஷாமிலா, குற்றாலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதனால் செய்யது முகைதீன் சலீம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு தங்கியிருந்து வந்தார்.

இந்த நிலையில் செய்யது முகைதீன் சலீம் நேற்று காலை கடையநல்லூரில் வசிக்கும் தனது தாயாரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சிவராமபேட்டை பாலம் அருகே வந்தபோது, சிமெண்டு மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆய்க்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (45). இவர் நேற்று தனது மனைவியின் ஊரான ருக்மணியம்மாள் புரத்திற்கு சென்றுவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் மனைவி கவிதாவுடன் திரும்ப வந்து கொண்டிருந்தார். சங்கரன்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் விலக்கு பகுதியில் வந்தபோது பின்னால் அமர்ந்திருந்த கவிதா திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த சரவணன் கதறி அழுதார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்