ஓசூரில் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த விவசாயி சாவு - கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

ஓசூரில் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த விவசாயி இறந்தார். இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-10-12 06:26 GMT
ஓசூர்,

ஓசூர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (வயது 42). ஓசூர் அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனிடையே அப்பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் அலெக்ஸ் (36) என்பவருக்கும், லட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே மனைவியை பிரிந்து, லட்சுமியுடன் வாழ்ந்து வந்த அலெக்ஸ், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த மது என்கிற மாதம்மா (32) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு மதுவிடம் இருந்து குழந்தையை வாங்கி தங்களது பராமரிப்பில் வைத்து கொள்ள, லட்சுமி மற்றும் அலெக்ஸ் ஆகியோர் தேர்ப்பேட்டைக்கு சென்றனர். ஆனால் வீட்டில் மது இல்லாததால், அவரிடம் அலெக்ஸ் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தேர்ப்பேட்டை மேல்தெருவை சேர்ந்த விவசாயி சங்கர் (65), ஆட்டோ டிரைவர் சேகர் (35) ஆகியோர், அலெக்சிடம் இது குறித்து கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ், அரிவாளால் சங்கர் மற்றும் சேகரை வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து லட்சுமி, அலெக்ஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து இதை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சேகர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்