கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று திரும்பிய விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று திரும்பிய விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-10-15 10:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த சு.பாப்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 50). விவசாயி. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் குணமடைந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். கொரோனா தொற்று ஏற்பட்டால் நாம் இறந்துவிடுவோம் என்ற பயத்தில் தொடர்ந்து புலம்பி வந்துள்ளார்.

இதன் காரணமாக குமார் நேற்று முன்தினம் விஷம் குடித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்