சிறுமியிடம் சில்மிஷம் செய்த வேன் டிரைவருக்கு சாகும் வரை சிறை தண்டனை

சிறுமியிடம் சில்மிஷம் செய்த வேன் டிரைவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது.

Update: 2020-10-15 23:51 GMT
நெல்லை,

நெல்லை டவுன் குன்னத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பெருமாள் (வயது 33). வேன் டிரைவரான இவர் தனது வேனில் மாணவ-மாணவிகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று வருவது வழக்கம்.

கடந்த 8-6-2016 அன்று பெருமாள் தனது வேனில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 3 சிறுமிகளை தச்சநல்லூரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்றார். அந்த பள்ளிக்கூடத்தில் 2 சிறுமிகளை மட்டும் இறக்கி விட்டு, 5 வயதான 1-ம் வகுப்பு படிக்கும் மாணவியை வேனில் அழைத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றார். பின்னர் அந்த சிறுமியிடம் பெருமாள் பாலியல் தொந்தரவு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மாலையில் சிறுமியை வேனில் அழைத்து சென்று, அவரது வீட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.

போக்சோ சட்டத்தில் கைது

இதற்கிடையே, அந்த சிறுமி அழுது கொண்டே இருந்ததால், அவளிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது தங்களது மகளிடம் பெருமாள் சில்மிஷத்தில் ஈடுபட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 31 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சாகும் வரை சிறை

வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, சிறுமியிடம் சில்மிஷம் செய்த பெருமாளுக்கு சாகும் வரையிலும் சிறையிலேயே இருக்குமாறு ஆயுள் தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெருமாள் சார்பில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை சிறுமியின் பாதுகாவலர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

இதையடுத்து பெருமாளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெப ஜீவா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்