கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-10-16 03:11 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 9,789 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 9,417 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 99 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்டவர்களின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,829 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:- சின்னசேலத்தை சேர்ந்த 71 வயதுடைய முதியவர் தொற்று அறிகுறியுடன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்