புதிய வேளாண் மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி

புதிய வேளாண் மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Update: 2020-10-16 06:11 GMT
ஸ்ரீரங்கம்,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநில தலைவராக இருந்த புலியூர் நாகராஜன் மறைவிற்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதுடன் அவரது குடும்பத்தினருக்கு த.மா.கா. சார்பில் ரூ.3 லட்சம் ஆறுதல் தொகை வழங்கப்படுகிறது. நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை மனதில் கொண்டு அரசு அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். மேலும் பயிர் காப்பீட்டு தொகையை உறுதிப்படுத்தி விவசாயிகளுக்கு உறுதி கொடுக்க வேண்டும். திருச்சியில் இருந்து கடலூர் வரைக்கும் ரெயில் போக்குவரத்து அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் அதன் மூலம் கூலித்தொழிலாளிகள் அதிகமானோர் பயனடைவார்கள்.

தமிழகம் இன்னும் 6 மாதத்தில் தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்து, அவரையே முதல்-அமைச்சர் வேட்பாளராகவும் அறிவித்துள்ளார். தொடர்ந்து 6 மாதமாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோய் பாதிப்பு தற்போது தமிழகத்தில் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களிடம் விழிப்புணர்வு முற்றிலும் குறைந்து உள்ளது. இதனால் மீண்டும் நோய் பரவலுக்கு ஒரு வழியை மக்களே உருவாக்கி விடக்கூடும் என்னும் அபாயம் இருக்கிறது. எனவே, மக்கள் கவனமாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா நோயை முற்றிலும் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு ஏதுவான புதிய வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி ஆபத்தான நிலையை விவசாயிகளின் மத்தியில் உருவாக்கி வருகின்றனர். நேரடியாக அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளிடையே நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாக்க வேண்டும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிக பூ உற்பத்தி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள பூக்களின் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. அதற்கு அரசு வழிவகை செய்யவேண்டும்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரங்கள் இல்லாத நிலை உள்ளது. அதற்கும் அரசு விவசாயிகளுக்கு ஒரு நல்ல வழி வகை செய்ய வேண்டும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு த.மா.கா. முற்றிலும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்