ராமநாதபுரம் அருகே விபத்து: மணமகன் உள்பட 2 பேர் பலி

ராமநாதபுரம் அருகே விபத்தில் மணமகன் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2020-10-17 21:30 GMT
ராமநாதபுரம்,

மதுரை சித்தாலங்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது60). கொத்தனாரான இவர் ராமநாதபுரம் அருகே நிறுவனம் ஒன்றில் கட்டிட வேலை பார்ப்பதற்காக வந்துள்ளார். நேற்று இரவு வழுதூர் விலக்கு ரோடு அருகே குளித்துவிட்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் செல்வம் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார்.

இவர் மீது மோதிய மோட்டார்சைக்கிளில் வந்த ராமநாதபுரம் அருகே உள்ள இருட்டூரணியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாதவன் (30) என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்ததாக கூறப்படுகிறது. திருமண வேலையாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்