மும்பையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை குறைந்தளவு பயணிகளுக்கு மட்டும் அனுமதி

மும்பையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதில் ரெயில்களில் வழக்கத்தைவிட குறைந்தளவில் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய முடியும்.

Update: 2020-10-18 20:55 GMT
மும்பை,

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மெட்ரோ ரெயில் சேவை, மும்பையில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று (திங்கள் கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. மும்பையில் மெட்ரோ ரெயில்களை இயக்க கடந்த 15-ந் தேதி மாநில அரசு அனுமதி வழங்கியிருந்தது.

நகரில் காட்கோபர்- வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பிரச்சினை காரணமாக தற்போது மெட்ரோ ரெயில்களில் குறைந்த அளவில் தான் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

360 பயணிகள்

இது குறித்து மெட்ரோ ஒன் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அபய் குமார் கூறியதாவது:-

கொரோனா பிரச்சினை காரணமாக மெட்ரோ ரெயில்கள் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 வரை மட்டுமே இயக்கப்படும். முன்பு 400 ரெயில் சேவைகள் இயக்கப்பட்டது. இனி 200 சேவைகள் மட்டுமே இயக்கப்படும். இதேபோல மெட்ரோ ரெயில்களில் 360 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதற்கு முன் 1,350 பயணிகள் சென்று கொண்டு இருந்தனர்.

இவ்வாறு அவா் கூறினார்.

இதேபோல இன்று முதல் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரெயில் பெட்டிகளில் வெப்பநிலை 25-27 டிகிரியாக இருக்கும். மேலும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிஜிட்டல் டிக்கெட்டுகள், ஸ்மார்ட் கார்டுகள், கியூஆர். முறையிலான டிக்கெட்டுகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதாகவும் மெட்ரோ ஒன் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்