கொரோனாவால் மரணம் அடைந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை குமாரசாமி வலியுறுத்தல்

கொரோனாவால் மரணம் அடைந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-18 21:36 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவத்துறையினர் தங்களின் உயிரை பணயம் வைத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் 400 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே அரசின் நிவாரணம் கிடைத்துள்ளது. இது தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. மாநில அரசு கொரோனா முன்கள பணியாளர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது.

ஒரு பள்ளி ஆசிரியையின் மகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாரின் உயிரை காப்பாற்றுமாறு கோரி கண்ணீர் வடித்தார். அவரது மருத்துவ செலவை ஏற்பதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பதிலளிக்கிறார். இத்தகைய மனநிலை கொண்ட அரசிடம் இருந்து கொரோனா முன்கள பணியாளர்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?.

உதவி செய்யவில்லை

கை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள், மேளம் அடியுங்கள் என்று கூறி பா.ஜனதாவினர் மக்களின் ஆதரவை பெற்றனர். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மரணம் அடைந்த முன்கள பணியாளர்களுக்கு இந்த அரசு உதவி செய்யவில்லை. அரசு அறிவித்த உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். இதை செய்யாவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்