நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 333 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 333 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

Update: 2020-10-19 04:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மகாலட்சுமி நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு மகாலட்சுமிநகர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 333 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 11 லட்சத்து 81 ஆயிரத்து 140 மதிப்பிலான வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது.

தமிழக அரசு சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீனவ சமுதாய மக்களின் மேல் முழுமையான அக்கறை கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்யவும் தீவிரமாக முயற்சித்து வருகிறது. சுனாமி பட்டாவானது, பெண்களின் கைகளில் வழங்கப்படுகிறது. ஏனென்றால் அவர்கள்தான், குடும்பத்தின் சொத்தை அழியாமல் பாதுகாக்கும் திறமையுடையவர்களாக இருக்கிறார்கள்.

நாகை மாவட்டம் இயற்கை இடர்பாட்டால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மாவட்டமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடலோர பகுதியில் உள்ள மீனவ மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்திலுள்ள பல மீனவ கிராமங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்றைய தினம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில் நாகை மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த 333 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 11 லட்சத்து 81 ஆயிரத்து 140 மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலனுக்காகவும், மீனவர்களின் நலனுக்காகவும் தமிழக அரசு தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் தங்க.கதிரவன், திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சிவா, வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், நகராட்சி ஆணையர் ஏகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் மற்றும் விழுந்தமாவடியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வேதையன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மீனா, மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு அந்தப்பகுதிகளில் கொடியேற்றி வைத்து பேசினார். முன்னதாக 500-க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் தங்களை இணைந்து கொண்டனர். இதில் முன்னாள் கீழவேளூர் தொகுதி செயலாளர் பால்ராஜ், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சதீஸ், சிறுபாண்மை பிரிவு ஒன்றிய தலைவர் சுல்தான் ஆரிபு மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருமண மண்டபம் ரூ. 10 லட்சத்தில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த திருமண மண்டபத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் தென்னரசு, ஆய்வாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயல் அலுவலர் கணேஷ்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமையன், தேவி செந்தில், ஒன்றியக்கவுன்சிலர் மாலதி துரைராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவில் எழுத்தர் அன்புகார்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்