சாலைவரியை நீக்கக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

சாலைவரியை ரத்துசெய்யக்கோரி புதுவையில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-20 22:01 GMT
புதுச்சேரி,

கொரோனா ஊரடங்கு காலத்தில் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படாததால் அதற்கான சாலை வரியை ரத்துசெய்யக்கோரி புதுவையில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் தங்கள் வாகனங்களுடன் 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் சம்மதித்தார். இந்தநிலையில் தங்கள் வாகனங்களை ரோடியர் மில் திடலில் கொண்டுவந்து நிறுத்தி நேற்று 2-வது நாளாக வாகன உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர்கிறது

முக்கிய நிர்வாகிகள் சிலர் சட்டசபையில் அமைச்சர் ஷாஜகானை சந்தித்துப் பேசினார்கள். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக முடிவு எடுக்க ஒரு வார காலம் ஆகும் என்று அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் மீண்டும் ரோடியர் மில் திடலுக்கு திரும்பி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

காரைக்கால்

இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலா வாகனத்தை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. அவர்களிடம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து அலுவலகம் முன்பு சுற்றுலா வாகனங்களை நிறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்