ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் கூறினார்.

Update: 2020-10-21 11:23 GMT
தர்மபுரி,

தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் ஒகேனக்கல்லில் செந்தில்குமார் எம்.பி. காவிரி கரையோர பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தொழிலாளர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உலக தரம் வாய்ந்த சுற்றுலா தலமான ஒகேனக்கல்லை நம்பி ஆயிரக்கணக்கான பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இன்றி கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் மறுகரையில் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் பரிசல்களை இயக்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒகேனக்கல்லில் கடந்த, 15-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

ஒகேனக்கல் சுற்றுலா தலம் முடங்கி உள்ளதால் இந்த பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலை தொடர்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்