முகநூல் மூலம் பழகிய நர்ஸ் முகத்தை மார்பிங் செய்து ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல் - டிராக்டர் டிரைவர் கைது

குடியாத்தம் அருகே முகநூல் மூலம் பழகிய நர்ஸ் முகத்தை மார்பிங் செய்து ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய டிராக்டர் டிரைவரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2020-10-21 17:30 GMT
குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நர்சாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக இளம்பெண் சொந்த கிராமத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வாலிபரின் வாட்ஸ்-அப் நம்பரிலிருந்து, இளம்பெண் வாட்ஸ்-அப்பிற்கு போட்டோக்கள் வந்துள்ளன. வேறு ஒரு பெண்ணின் ஆபாச படத்தில், நர்ஸ் முகத்தை வைத்து மார்பிங் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிறிது நேரத்தில் நர்சை தொடர்பு கொண்ட அந்த நபர் இது போன்ற படங்களை யாருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அவர், தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சியாமளா, டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரம் மகாதேவமலை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சரத்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் தலையை ஆபாச படத்துடன் மார்பிங் செய்து அனுப்பி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்