உடன்குடியில் மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி மாடு குறுக்கே வந்ததால் பரிதாபம்

உடன்குடியில், மாடு குறுக்கே வந்ததால் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் மரத்தில் மோதி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-10-22 16:38 GMT
உடன்குடி, 

சாத்தான்குளம் அருகே உள்ள அறிவான்மொழியை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி சக்திகனி. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ளனர். இவர்களுடைய 2-வது மகன் பிரவீன்குமார் (வயது 19). இவர் நேற்று காலை புதிய மோட்டார் சைக்கிளில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து உடன்குடியை நோக்கி வந்துகொண்டிருந்தார். உடன்குடி வில்லிகுடியிருப்பு சந்திப்பு அருகே சென்றபோது மாடு ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. இதனால் பிரவீன்குமார் பிரேக் போட்டபோது மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் கரையில் நின்ற பூவரசம் மரத்தில் மோதியது.

பரிதாப சாவு

இதில் மோட்டார்சைக்கிள் சுக்கு நூறாக நொருங்கியது. பிரவீன் குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகாகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிரவீன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்