புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக்கொலை

6 நாளில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. துணை அமைப்பாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-10-25 03:54 GMT
ஆவூர், 

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 40). இவர் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இவரது தோட்டம் மாத்தூர் ரெயில்வே கேட் அருகே ஆவூர் ரோட்டில் உள்ளது. அங்கு 2 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தார். மேலும் பொக்லைன் எந்திரம், லாரிகளை வைத்தும் தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் பாலசந்தருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வருகிற 30-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று காலையில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை 6.45 மணி அளவில் பாலசந்தர் ஆவூர் ரோட்டில் உள்ள அவரது தோட்டத்துக்கு காரில் சென்றார். அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து, டிரைவர் சுபாஷ் மற்றும் தோட்ட தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று 2 கார்களில் 20-க்கும் மேற்பட்ட கும்பல் வந்தது. அவர்கள் காரில் இருந்து இறங்கி பாலசந்தரை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதை சுதாரித்துக்கொண்ட அவர் நாற்காலியால் தடுத்தார். ஆனாலும் அந்த கும்பல் பாலசந்தர் காலில் வெட்டினர். இதனையடுத்து அவர் காரில் ஏறினார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று காருக்குள்ளே வெட்டி சாய்த்தனர். இதில் முகம், கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது.

சாவு

கும்பல் வருவதை பார்த்ததும் தொழிலாளர்கள் ஓடிவிட்டனர். டிரைவர் சுபாஷ் தடுக்க முயன்றார், இதனால் அவரது கால் விரலில் லேசான வெட்டு விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து டிரைவர் சுபாஷ், பாலசந்தரை அதே காரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலசந்தர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். பின்னர் பாலசந்தரின் உடலை அவரது வீட்டுக்கு டிரைவர் கொண்டு சென்றார்.

தகவல் அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பாலசந்தரின் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருப்பதற்காக அதி விரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் பாலசந்தரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கொலை நடந்த தோட்டத்திற்கும் மற்றும் வீட்டுக்கும் சென்று விசாரணை நடத்தினார். விரல்ரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலையான பாலசந்தர் மீது மாத்தூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்