வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையில் தூக்கில் தொங்கும் போராட்டம் - தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடந்தது

விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையில் தூக்கில் தொங்குவது போன்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-10-25 12:45 GMT
விழுப்புரம், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை கண்டித்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் மின்னல் தினேஷ் வரவேற்றார். மாநில தொழிற்சங்க தலைவர் பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினார்.

இதில் விவசாயிகளை வஞ்சிக்கிற வேளாண் சட்டங்களை கண்டித்தும், இந்த சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியதோடு, இந்த சட்டங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் ஏர் கலப்பையில் தூக்கு கயிறை மாட்டிக்கொண்டு அதில் தொங்குவதுபோன்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில அமைப்புக்குழு நிர்வாகி சசிக்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் அரங்கராமானுஜம், மாவட்ட விவசாய அணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர்அலி, டேவிட், ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், வடிவேலன், ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி, சக்கரபாணி, நகர தலைவர் தியாகு, பொருளாளர் அய்யனார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்