ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2020-10-26 22:50 GMT
பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் அவர்கள் அருவியில் குளித்து பரிசலில் சென்று மகிழ்வார்கள்.

இந்த நிலையில் ஆயுதபூஜை தொடர் விடுமுறை என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து கொத்திகல் பரிசல் துறையில் இருந்து மணல்திட்டு வரை காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் ஊட்டமலை, ஆலம்பாடி, மணல்திட்டு, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மசாஜ், சமையல் மற்றும் பரிசல் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேட்டூர், ஏற்காடு

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை நாளையொட்டி மேட்டூர், ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் கடந்த 2 நாட்களாக குறைவாக காணப்பட்டது. ஏற்காட்டில் படகு இல்லம் இன்னும் திறக்கப்படவில்லை. மேலும் இ-பாஸ் இருந்தால் தான் ஏற்காடு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மேலும் மேட்டூரில் அணை பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்