செங்கல்பட்டு அருகே பெட்ரோல் குண்டு வீசி 3 பேருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-10-29 04:04 GMT
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னமேலமையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் விக்னேஷ் (வயது 22), தனசேகர் (23), சுரேந்தர் (21). இவர் கள் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது 5 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 10 பேர் அவர்கள் மீது திடீரென பெட்ரோல் குண்டு வீசினர். பெட்ரோல் குண்டு வெடித்ததும் தப்பி ஓட முயன்ற விக்னேஷ், தனசேகர், சுரேந்தர் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

போலீசார் விசாரணை

அங்கு இருந்தவர்கள் இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த விக்னேஷ், தனசேகர், சுரேந்தர் ஆகியோரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இது முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்