மயூரநாதர் கோவில் தேர் திருவிழா நடத்த அனுமதி கோரி அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்தது

மயூரநாதர் கோவில் தேர் திருவிழா நடத்த அனுமதி கோரி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-10 22:15 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் துலா உற்சவத்தின்போது மயூரநாதர் கோவில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 15-ந் தேதி தேர் திருவிழா நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தேர் வீதி உலா செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தேர் திருவிழா நடைபெற அனுமதி கோரி தாசில்தார் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் நிரஞ்சன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் வேலன், மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தேர் திருவிழாவிற்கு தளர்வினை அளித்து, விழா நடக்க அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மயூரநாதர் கோவில் தேர் திருவிழா நடத்திட அனுமதி கோரி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதில் மாநில துணை செயலாளர் கராத்தே ஜெய், மாவட்ட செயலாளர் உமாசங்கர், மாவட்ட துணை பொதுச் செயலாளர் துளசி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுதர்சன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்