கவரிங் நகையை அடகு வைத்து மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

புதுவையில் கவரிங் நகைகளை அடகு வைத்து நூதனமாக மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-11-13 21:47 GMT
புதுச்சேரி, 

புதுவை ரெயின்போ நகரை சேர்ந்தவர் பிரதீக் ஜெயின் (வயது 31). இவர் மகாத்மா காந்தி வீதியில் சின்ன மணிக்கூண்டு அருகே நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கடந்த ஜூன் மாதம் 2 சங்கிலிகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வாங்கிச் சென்றார்.

ஆனால் மாதந்தோறும் அதற்கான வட்டியை செலுத்தாத நிலையில் பிரதீக் ஜெயினுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ்குமார் அடகு வைத்த நகைகளை பரிசோதித்து பார்த்த போது அவை கவரிங் நகை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். முதலில் உண்மையான தங்க நகைகளை கொடுத்து பிரதீக் ஜெயினின் கவனத்தை திருப்பி அதன்பின் கவரிங் நகைகளை கொடுத்து சுரேஷ்குமார் நூதனமாக மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

போலி முகவரி

இதுகுறித்து புகார் செய்யப்பட்டதன்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன்படி கடையில் நகை அடகு வைத்த போது கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அதுவும் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கவரிங் நகைகளை வைத்து நூதன முறையில் மோசடி செய்த மர்ம ஆசாமியை தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்