விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் அட்டகாசம்: ஆட்டை கடித்துக் கொன்ற சிறுத்தை

விக்கிரமசிங்கபுரம் அருகே ஆட்டை கடித் துக் கொன்று சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தை தொடர்ந்துள்ளது.

Update: 2020-11-16 16:50 GMT
விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம் வனச்சரகம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூர் வனக்காவல் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களான கோரையார்குளம், வேம்பையாபுரம் மற்றும் செட்டிமேடு ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நாய், ஆடுகளை தொடர்ச்சியாக சிறுத்தை வேட்டையாடியது.

எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்்கை வைத்தனர். அதன் பேரில் ஏற்கனவே அப்பகுதிகளில் வனத்துறையினர் 7 சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த நிலையில் தற்போது சிறுத்தையின் அட்டகாசம் மீண்டும் தொடர்ந்துள்ளது. கடந்த 7-ந் தேதி துரைக்கண்ணு என்பவரது வீட்டில் ஒரு ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.

ஆட்டை கடித்துச் கொன்றது

இந்த நிலையில் வேம்பையாபுரம் காலனி தெற்கு தெருவை சேர்ந்த சிவசங்கரன் (வயது 40) என்பவர் வீட்டில் 6 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் தனது ஆடுகளை வீட்டில் கட்டிப் போட்டிருந்தார். இவர் தனது நண்பர் மருதுபாண்டியுடன் சேர்ந்து இரவு வயலில் பன்றி காவலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கட்டி போட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்று தின்று கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த இருவரும் உடனடியாக சத்தம் போட்டு சிறுத்தையை விரட்ட முன்றுள்ளனர். ஆனால் சிறுத்தை அவர்களை நோக்கி சத்தமிட்டு மிரட்டியுள்ளது.

இதனால் அவர்கள் தீப்பந்தம் காட்டி விரட்டியதால், பாதி சாப்பிட்ட நிலையில் ஆட்டை போட்டுவிட்டு சிறுத்தை காட்டுக்குள் ஓடி விட்டது. இதுகுறித்து சிவசங்கரன், பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்