முன்னாள் மத்திய மந்திரி ஜெய்சிங் ராவ் பா.ஜனதாவில் இருந்து விலகல்
முன்னாள் மத்திய மந்திரி ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீல் பா.ஜனதாவில் இருந்து விலகினார்.
அவுரங்காபாத்,
அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீல். இவருக்கு சமீபகாலமாக கட்சி பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
அதில் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீல் கூறியிருப்பதாவது:-
பொறுப்பு வழங்கப்படவில்லை
தற்போது நான் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ ஆக வேண்டும் என்று விரும்பவில்லை. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அதற்காக உழைக்க விரும்பினேன். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதற்கான பொறுப்பை கட்சி எனக்கு வழங்கவில்லை. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
சமீபத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே அந்த கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் இணைந்தார். இந்த நிலையில் மற்றொரு பா.ஜனதா தலைவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து இருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.