வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் சாவு - காவேரிப்பாக்கம் அருகே பரிதாபம்

காவேரிப்பாக்கம் அருகே வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-11-18 09:30 GMT
காவேரிப்பாக்கம்,

காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரும்புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தேவன். அவரது மகன் கிஷோர்குமார் (வயது 17), வேலூரில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று கிஷோர்குமார் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரின் ‘சுவிட்ச்’ போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காவேரிபாக்கத்தை அடுத்த கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். அவரது மகன் மதன்குமார் (வயது 15), 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள உறவினரின் பிறந்த நாள் விழாவுக்கு மதன்குமார் சென்றுள்ளார். அங்கு வீட்டு மாடி மீது சீரியல் விளக்கு போடப்பட்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சீரியல் விளக்கு மீது மதன்குமார் கை பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி மதன்குமார் மயங்கினார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்