திருச்செந்தூர் கந்தசஷ்டி 3-ம் திருநாள்: சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 3-ம் திருநாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2020-11-18 17:19 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து உச்சிகால தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.

சுவாமிக்கு அபிஷேகம்

அங்கு மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்து யாகசாலையை சேர்ந்தார்.

போலீசார் பாதுகாப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் வளாகம், பிரகாரங்களில் பக்தர்கள் விரதம் இருக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் அவர்களது வீடுகளில் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். சாமி தரிசனத்திற்கு மட்டும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவுப்படி திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்