லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

தாம்பரத்தில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கீழே விழுந்த வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-11-20 02:05 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 25). இவர், சேலையூரில் உள்ள இருசக்கர வாகனங்களை சர்வீஸ் செய்யும் மையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை பிரேம்குமார், சேலையூரில் இருந்து தாம்பரத்தில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார்.

தாம்பரம்-வேளச்சேரி சாலையில் தனியார் கல்லூரி நுழைவுவாயில் எதிரே உள்ள சிக்னல் அருகே நின்றபோது, சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, பிரேம்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரேம்குமார், அதே லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த நரேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

தாம்பரம் அடுத்த படப்பை, விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் ரூபன் ராஜசேகர் (29). இவர், மோட்டார்சைக்கிளில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்வதற்காக பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கார், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரூபன்ராஜசேகர், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் செல்வம் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்