கன்னியாகுமரியில் பூம்புகார் அலுவலகம் முன்பு திரண்ட வியாபாரிகளால் பரபரப்பு - படகு போக்குவரத்தை உடனே தொடங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வலியுறுத்தி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முன் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-20 06:05 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளன. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் படகில் சென்று பார்த்து வந்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அடியோடு நின்றுவிட்டது. இதனால் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதை தொடர்ந்து கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், இயக்கங்களும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்்பாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி குமரிக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மறுநாள் (11-ந் தேதி) முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து உடனடியாக தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மறுநாள் முதலே கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகள் குவிய தொடங்கினர். ஆனால் இதுவரை படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி தேவிகுமரி வியாபாரிகள் முன்னேற்றசங்க செயலாளர் சகாயசேவியர் தலைமையில் இணைச்செயலாளர் பீர்முகமது, பொருளாளர் பாலன் மற்றும் முகமதுயூசுப் உள்பட ஏராளமான வியாபாரிகள் நேற்று மதியம் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நுழைவு வாயில் முன்பு திரண்டனர். அவர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்