மந்திரவாதியால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி கைது

மந்திரவாதியால் சீரழிக் கப்பட்ட 2 சிறுமிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-22 04:28 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரது 15 வயது, 13 வயதுடைய மகள்களுக்கு பேய் ஓட்டுவதற்காக நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் பகுதியை சேர்ந்த மந்திரவாதியான சேகர் என்பவரின் வீட்டுக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அந்த மந்திரவாதி 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதையடுத்து மங்களபுரம் போலீசார் போலி மந்திரவாதி சேகரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுமிகளுக்கு மேலும் ஒருவர் பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமிகளின் பெற்றோர் வீராணம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு 15 மற்றும் 13 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார் புரத்தை சேர்ந்த ரவீந்திரன் (வயது 40) என்பவர் சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியில் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அந்த பகுதியில் குடும்பத்துடன் தங்கி அந்த நிலத்தில் நாங்கள் கூலி வேலை செய்து வந்தோம்.

இந்த நிலையில் நாங்கள் வேலைக்கு சென்ற சமயங்களில் எனது 2 மகள்களுக்கும் ரவீந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் ரவீந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே தலைமறைவான ரவீந்திரனை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

மந்திரவாதியால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கு மேலும் ஒரு விவசாயி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்