விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-11-22 13:49 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 4,214 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 ஆயிரத்து 731 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

15 ஆயிரத்து 449 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,098 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 57 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

13 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு அடைந்தவர்கள் கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். மாவட்ட சுகாதார துறையினர் பாதிப்பு அடைந்தவர்களின் பகுதிகளை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. இதனால் பாதிப்பு அடைந்த பகுதிகள் எவை, எவை என்று தெரியாத நிலையில் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

தொடர்ந்து மாவட்ட சுகாதார துறையினர் மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிப்பதில் அக்கறை காட்டாத நிலை நீடிக்கிறது.

அறிவுறுத்தல்

தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. மாநில அரசு அடுத்து வரும் 20 நாட்களுக்கு மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ள நிலையில் மாவட்ட சுகாதார துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்யாத நிலையே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்