திருவாரூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-11-23 04:32 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் முன்னிலை வகித்தார். மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது.

வருகிற 2021 -ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலி;ல் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் குறித்த பணிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும் முக்கிய இடங்களில் விளம்பர பதாகைகள் அமைக்கப்படும். எனவே தகுதியான மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர்கள் பாலசந்திரன், புண்ணியகோட்டி, தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான பூண்டி கே.கலைவாணன், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் மூர்த்தி மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்