மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

தாழக்குடியில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2020-12-01 03:48 GMT
ஆரல்வாய்மொழி,

தாழக்குடி விளாங்காட்டுகாலனியை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 55). இவருக்கு அருள்மணி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. உச்சிமாகாளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினமும் உச்சிமாகாளி மது போதையில் வீட்டுக்கு வந்தார். அவரை மனைவி அருள்மணி கண்டித்தார். இதனால், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த உச்சிமாகாளி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் மாலையில் தாழக்குடி புத்தனாறு கால்வாய் அருகே உச்சிமாகாளி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்மணி விரைந்து சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உச்சிமாகாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்