வைகை அணையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு

வைகை அணையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-12-01 05:47 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவுதம் சர்மா (வயது 32). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர், பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவருக்கு விடுமுறை என்பதால் தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களுடன் வைகை அணைக்கு சென்றார்.

பின்னர் வைகை அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி செல்லும் தடுப்பணை பகுதியில் தனது நண்பர்களுடன் அவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு கவுதம் சர்மா சென்றார். அவரால் மேலே வர முடியவில்லை. சிறிதுநேரத்தில் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார்.

தண்ணீர் திறப்பு தள்ளிவைப்பு

இதுகுறித்து அவருடைய நண்பர்கள், வைகை அணை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி கவுதம் சர்மாவை தீவிரமாக தேடினர். இரவு நேரமாகியதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் நேற்று காலை 7 மணியளவில், கவுதம் சர்மாவின் உடலை மீண்டும் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணிக்கு வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆற்றுப் பகுதியில் நீரில் மூழ்கியவரை தீயணைப்புத்துறையினர் தேடி வருவதால் தண்ணீர் திறப்பது தள்ளி வைக்கப்பட்டது.

உடல் மீட்பு

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் தடுப்பணை பகுதியில் கவுதம் சர்மாவின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கவுதம் சர்மாவின் உடல் மீட்கப்பட்ட பிறகு, வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்