எட்டயபுரம் அருகே, கார் மோதி சிறுவன் பலி - சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்

எட்டயபுரம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதி சிறுவன் பலியானான்.

Update: 2020-12-01 22:00 GMT
எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே உள்ள ராமனூத்து சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் சந்தோஷ்(வயது 8). இவன், எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கொரோனா விடுமுறை என்பதால் அவன் தன் ஊரிலேயே சிறுவர்களுடன் விளையாடி பொழுதை போக்கி வந்தான்.

நேற்று காலையில் நண்பர்களுடன் காலை கடனை முடிக்க மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளான்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் இவன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானான்.

உடனே அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சிறுவனின் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரையும், டிரைவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்