போடியில் பூ வியாபாரி குத்திக்கொலை; வாலிபர் கைது

போடியில் பூ வியாபாரியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-12-01 19:14 GMT
பூ வியாபாரி
போடி நகராட்சி பேட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 65). பூ வியாபாரி. இவர் போடி டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சந்தில் பூக்கடை வைத்துள்ளார். இவரது மகன் பாலமுருகன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் லிங்கேஸ்வரி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் லிங்கேஸ்வரியின் தம்பி சுந்தரேசுவரன் (23), தனது அக்காளின் தற்கொலைக்கு முருகனின் குடும்பத்தினர் தான் காரணம் என்று கூறி வந்தார். மேலும் அவர் ஆத்திரத்தில் முருகனிடம் அடிக்கடி தகராறும் செய்துள்ளார்.

குத்திக்கொலை
இதற்கிடையே தனது அக்காளின் சாவிற்கு காரணமானதாக முருகனை கொலை செய்ய சுந்தரேசுவரன் திட்டமிட்டார். அதன்படி, நேற்று இரவு 7 மணி அளவில் முருகன் தனது பூக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுந்தரேசுவரன், அவரிடம் தகராறு செய்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுந்தரேசுவரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய முருகனை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார். இதுகுறித்து போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து சுந்தரேசுவரனை கைது செய்தார். பூ வியாபாரியை குத்திக்கொன்ற சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்